சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 6, 2014

பரம(ன்) ரகசியம் – 83


ஸ்வர் ஹரிராமிடம் அவசரமாகச் சொன்னான். “சார். அவனை தயவு செய்து நிறுத்துங்கள்

ஹரிராமிற்கு என்ன நடக்கின்றது என்று முழுமையாக விளங்கவில்லை. அவரிடம் இருக்கும் அபூர்வ சக்திக்குக் கூட ஒரு கணத்தில் எல்லாவற்றையும் புரியை வைக்க முடியவில்லை. அதனால் அவர் எதிலும் அனாவசியமாகத் தலையிட விரும்பவில்லை.

கணபதி அந்த இடத்தில் இருந்து போய் விட்டிருந்தபடியால் ஹரிராம் அவன் தொடர்பில் இருந்து அறுபட்டார். ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தில் மறுபடி கவனத்தைக் குவித்து அலைகளில் ஒன்றி ஹரிராமை மனதில் உறுதியாக நிறுத்தினான். ஹரிராம் மறுபடி தொடர்பில் வந்தார்.

ஈஸ்வர் அவரிடம் மன்றாடிச் சொன்னான். “தயவு செய்து அவனைப் பிடித்து நிறுத்துங்கள். அவனுக்கு அங்கே ஆபத்து இருக்கு

ஹரிராம் அசையவில்லைஈஸ்வருக்கு அந்த அசைவற்ற தன்மை கோபத்தை ஏற்படுத்த ஆரம்பிப்பது போல் இருந்தது. கோபம் அவனிடம் இப்போது இருக்கும் லயிப்பு சக்தியை அழித்து விடும் என்று அறிவு எச்சரிக்க அந்த எண்ணத்தின் போக்கை ஈஸ்வர் அப்படியே நிறுத்தினான். ஆனாலும் கூட அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இது வரைக்கும் ஒருத்தரையாவது நேசிச்சிருக்கீங்களா?
                                                           
ஈஸ்வர் மறுபடியும் தன் முழு சக்தியையும் திரட்டி கணபதியைத் தொடர்ந்து எச்சரிக்க ஆரம்பித்தான். ஆனால் ஆண்டாண்டு காலமாய் கணபதி குருஜி மேல் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கையை அவன் எச்சரிக்கை தகர்க்கவில்லை.

கணபதி  வேகமாக குருஜியின் அறைக்குள் நுழைந்தான். கையாலாகாத பரபரப்புடன் ஈஸ்வரும், ஈஸ்வர் கேட்ட கேள்வி லேசாக உறுத்த ஆரம்பிக்க, என்ன தான் நடக்கிறது என்பதை அறியும் ஆவலில் ஹரிராமும் குருஜி அறையில் நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.....

“என்ன கணபதி?குருஜி ஆச்சரியத்துடன் கேட்டார்.

குருஜியைப் பற்றி ஈஸ்வர் தவறாகச் சொன்னதைத் தன் வாயால் திரும்பச் சொல்வது கூட அவனுக்கு அநீதியாய் பட்டது.  அதனால் குருஜி கெட்டவர் என்று ஈஸ்வர் சொன்னதை மட்டும் அவரிடம் சொல்வதைத் தவிர்த்து விட்டு மடை திறந்த வெள்ளம் போல் கணபதி நடந்ததை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்தான். குருஜியின் முகத்தில் ஈயாடவில்லை.

கணபதி அழாத குறையாகச் சொன்னான். “குருஜி.... நான் மந்த புத்திக்காரன். சிக்கலான எதுவும் என் தலையில் ஏறாது. பெரிய பெரிய விஷயங்கள் எனக்குப் புரியாது. உங்களோட பிரசங்கத்தை எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் கேட்டு வளர்ந்திருக்கேன். உங்கள் வார்த்தைகள் எல்லாம் எனக்கு புரிஞ்சுதுன்னு சொல்ல மாட்டேன்.... ஆனா அது சத்தியம்னு மட்டும் எனக்குப் புரியும்.... சிலதெல்லாம் கேட்கறப்ப அழுகை வரும்... மனசு நிறைஞ்சு போகும்.... ஆனா அது கூட புரிஞ்சு தான்னு சொல்ல மாட்டேன்.... சில சமயம் ஏதோ பெரிய விஷயம், அற்புதமான விஷயம்ங்கிற அளவு தான் எனக்குத் தெரியும்.... அதுலயே மனசு நிக்கும்... கேட்டுகிட்டே இருக்கலாம்னு தோணும்... நான் உங்களை மனசுல பெரிய உயரத்துல வச்சிருக்கேன் குருஜி. நீங்க எனக்கு எத்தனையோ நல்லது செஞ்சிருக்கீங்க. இந்த முட்டாளையும் சரிசமமா, அன்பா நடத்தி இருக்கீங்க. இந்த சக்தி நிறைஞ்ச சிவலிங்கத்துக்கு பூஜை செய்யற பாக்கியத்தையும் தந்திருக்கீங்க.

ஈஸ்வர் அண்ணனை நான் ஒரே தடவை தான் பார்த்திருக்கேன்.... அவரும் நல்லவரு... பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு... பார்த்த அரை மணி நேரத்துல எனக்கு அண்ணனாயிட்டாரு.... அன்பா எனக்கும், என் பிள்ளையாருக்கும் பட்டு வேஷ்டி எல்லாம் வாங்கித் தந்திருக்காரு... இப்ப தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி அவர் இப்படி எல்லாம் சொல்ற மாதிரி தெரியறது கனவா, இல்லை எனக்குப் பிடிச்ச பைத்தியமான்னு கூட எனக்குப் புரிய மாட்டேங்குது. நான் என்ன செய்யணும், எது சரி, எது தப்புன்னு நீங்க தான் எனக்குச் சொல்லணும். நீங்க என்ன செய்யச் சொல்றீங்களோ அதை நான் செய்யறேன்....

சொல்லி முடிக்கையில் கணபதி கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. சொல்லி விட்டு அவன் அவரைப் பார்த்துக் கைகூப்பி நின்றான். குருஜி சிலை போல அமர்ந்திருந்தார். அவன் பேசும் போதே அவரைப் பற்றி அவனிடம் ஈஸ்வர் மோசமான அபிப்பிராயத்தைச் சொல்லி இருக்கிறான், அதை கணபதி அவரிடம் சொல்லாமல் மறைக்கிறான் என்று தெரிந்தது. அதைச் சொல்ல முடியாமல் கணபதி முழுங்கி விட்டு மீதியை மட்டும் சொன்னது அவரது ஆத்மாவையே அசைத்தது.

கணபதி வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அவர் மன அமைதி பறிபோயிருந்தது. பாபுஜி எகிப்திய தேர்தலுக்கு நிற்கப் போகிற ஆளை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி தந்து விட்டுப் போன தகவல்களை வைத்து இணையத்தில் அந்த ஆளைப் பற்றி ஆராய ஆரம்பித்த போது பறி போன அமைதி அது. அந்த ஆள் வெடிமருந்து, ராணுவத் தளவாடங்கள் ஆகியவற்றைத் தயாரித்து ரகசியமாக விற்பனை செய்யும் ஆள் என்று பரவலாகச் சொல்லப்படுவதாகத் தெரிந்தது. பெயருக்கு வேறு ஏதோ தொழிற்சாலை நடத்திக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.

புதியதொரு உலகம் படைக்கக் கிளம்பி இருந்தவருக்கு இந்தச் செய்தி அதிர்ச்சி அளித்தது.  பாபுஜியை வரவழைத்தார். பாபுஜி சொன்ன ஆளைப் பற்றித் தெரிந்து கொண்ட எதையும் தெரிவிக்காமல் சாதாரணமாகப் பேசுவது போல் பேசினார். “பாபுஜி, நாம் நீ சொன்ன விஷயத்தை நாளைக்கு பார்த்துக் கொள்வோம். பிரச்சினை இல்லை.... அடுத்ததாய் என்ன எல்லாம் செய்யலாம் என்று எல்லாரும் சேர்ந்து யோசித்து வைத்திருக்கிறீர்களா?

பாபுஜி சொன்னார். “முதல்ல நாம எல்லாருமே நம் அதிகாரத்தையும், பலத்தையும் அதிகப்படுத்திக்கணும்னு முடிவு செய்திருக்கோம் குருஜி. நாம சக்தியுள்ளவங்களா ஆனா தானே உலகத்துக்கு நல்லதைச் செய்ய முடியும்?

குருஜி தலையாட்டினார். இயல்பான குரலில் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டுப் பதில்களைத் தெரிந்து கொண்டார். எந்த மாதிரி எல்லாம் சக்திகளை அதிகப்படுத்திக் கொள்வது, தங்கள் நிலைகளைப் பலப்படுத்திக் கொள்வது என்பதில் எல்லாம் அவர்களுக்குத் தெளிவான திட்டங்கள் இருந்தன. அதைப் பற்றி எல்லாம் கலந்து பேசி இருந்தார்கள். ஆனால் புதியதொரு லட்சிய உலகம் படைக்க என்னவெல்லாம் திட்டங்கள் தீட்ட வேண்டும் என்று அவர்கள் இன்னும் யோசிக்க ஆரம்பிக்கவே இல்லை. சொல்லப் போனால் அப்படி ஒரு எண்ணம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.  அவரிடம் நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கும் ஆர்வம் கூட அவர்களிடம் இருக்கவில்லை....

கிளம்பும் முன் பாபுஜி ஆவலுடன் கேட்டார். “குருஜி நாளைய ஆராய்ச்சிக்கு ஈஸ்வர் ஏதாவது இடைஞ்சல் செய்ய முடியுமா?

“அவன் என்ன செய்யறான்னு முதல்ல பார்க்கலாம் பாபுஜி.என்று சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்ட குருஜி பின் உறங்கவில்லை. உறக்கம் வரவில்லை....

ஈஸ்வர் என்ன செய்கிறான் என்பதைத் தெரிவிக்க வந்தது போல் தான் கணபதி பாபுஜி போய் சிறிது நேரத்தில் வந்தான்...பேசினான்... அவனையே பார்த்துக் கொண்டு சிலை போல அமர்ந்திருந்த குருஜிக்கு மனதின் உள்ளே எரிமலைகளே வெடித்துக் கொண்டிருந்தன. கணபதி இங்கிருப்பதால் ஈஸ்வர் பார்வையும் இங்கேயே இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. ஒரு பக்கம் அவர் ஈகோ தலை தூக்கியது. ஈஸ்வர் முன்னால் தோற்று விடக் கூடாது என்று தோன்றியது. ஆனால் கணபதியின் கள்ளங்கபடமில்லாத முகத்தைப் பார்க்கையில் அவருடைய இளமைக்காலம் நினைவுக்கு வந்தது.

தீராத ஞான வேட்கையுடன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் அவர். எத்தனை குருக்கள்... எத்தனை ஆசிரமங்கள்... எத்தனை தவங்கள்... எத்தனை தேடல்கள்.. ஒவ்வொரு தேடலிலும் நிறைய கற்று கொண்டவர் அவர்... எத்தனையோ குருக்களை மிஞ்சி இருக்கிறார்.... அக்னி நேத்ர சித்தரிடம் ‘உங்கள் நிழலில் கூடப் பாடம் கிடைக்கும் என்று வந்ததாகச் சொன்னவர்.... கணபதி அளவுக்கு இல்லா விட்டாலும் மனதில் நன்மைகளையே நினைத்து உயர ஆரம்பித்தவர்.... இன்று...?

அவர் நினைவை விட்டகலாத, அக்னி நேத்ர சித்தரின் வார்த்தைகள், இப்போதும் அவர் காதுகளில் எதிரொலிக்கின்றன. “சிகரத்தைத் தொடும் திறமை உள்ளவன் சராசரியாக இருந்து சாவது தான் உலகத்திலேயே அவன் செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றம்.

சிகரத்தைத் தொடும் திறமை இருந்த அவர் இன்று சராசரியாகக் கூட இல்லை, தரை மட்டத்திற்கு வந்தாயிற்று. இத்தனை நல்லவனை, இத்தனை நம்புபவனை, ஒரு குழந்தையை ஏமாற்றி இனி அதல பாதாளத்திற்கும் போக வேண்டுமா?

அவர் இடையில் மறந்திருந்த, அக்னிநேத்ர சித்தரின் கடைசி வார்த்தைகள், செவிப்பறையில் அறைந்தன. கடைசியாக உனக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனை நிர்ணையிப்பது அவனுக்கு என்ன தெரியும் என்பதல்ல, அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனை நிர்ணயிக்கிறது. அதை என்றும் மறந்து விடாதே....”

மனதை மாற்றிக் கொள்ளும் முன்பு சொல்லி விட வேண்டும் என்ற உறுதியுடன் குருஜி கணபதியிடம் சொன்னார். “ஈஸ்வர் என்ன சொல்றானோ அப்படியே செய் கணபதி

கணபதிக்கு மட்டுமல்ல ஈஸ்வருக்கும் கேட்டதை நம்ப முடியவில்லை. குருஜி கோபத்தில் தான் சொல்கிறார் என்று கணபதிக்குத் தோன்றியது. அவன் வருத்தத்துடன் ஏதோ சொல்ல வாயைத் திறந்தான். ஆனால் குருஜி அவனைப் பேச விடவில்லை. இது வரை தன் வாழ்க்கையில் சொல்லாத வார்த்தைகளை, ஒத்துக் கொள்ளவே வேதனையாக இருந்த வார்த்தைகளை, கஷ்டப்பட்டு அவர் சொன்னார். “கணபதி நாம ஒரு ஊருக்குப் போய்கிட்டு இருக்கோம்னு வச்சுக்கோ. ரொம்ப தூரம் போயிட்டோம். போனதுக்கப்பறம் தான் வந்த பாதை வேறு ஊருக்குப் போகிற பாதைன்னு தெரியுது. என்ன செய்வோம். திரும்பி வந்து சரியான பாதையில போக ஆரம்பிப்போம். இல்லையா? இவ்வளவு தூரம் வந்துட்டமே அந்த வேற ஊருக்கே போயிடலாம்னு நினைப்போமா? இவ்வளவு தூரம் தவறுதலா வந்துட்டமேன்னு வருத்தமாய் இருந்தாலும் போக நினைச்ச ஊர் முக்கியமானதா இருக்கறப்ப உடனே திரும்பத் தானே செய்வோம். அந்த மாதிரி தான் இதுவும். நான் ஒன்னு நினைச்சு இந்த ஆராய்ச்சியை ஆரம்பிச்சேன். இப்ப நான் நினைச்சதுக்கு எதிர்மாறா இந்த ஆராய்ச்சி போகிற மாதிரி எனக்கும் தோணுது. ஆராய்ச்சில இது வரைக்கும் தப்பு நடக்கலை. ஆனா இனிமே தப்பா தான் நடக்கும் போலத் தெரியுது. அதனால இங்கத்து ஆள்கள் உன் கிட்ட என்ன சொன்னாலும் தலையாட்டு. ஆனால் அவங்க சொல்ற மாதிரி செய்யாதே. ஈஸ்வர் சொல்ற மாதிரியே செய். ஆனால் இதைப் பத்தி இங்கே வேற யார் கிட்டயும் வாயைத் திறக்காதே.

கணபதி திகைப்புடன் அவரைப் பார்த்தான். அவர் புன்னகைக்க முயன்றார். உள்ளே நடந்து கொண்டிருந்த பிரளயத்தில் அவருக்கு அது சாத்தியப்படவில்லை. கணபதிக்கு தெளிவு பிறந்தது. நீங்க சொல்ற மாதிரியே செய்யறேன் குருஜிஎன்று சொல்லியவன் சாஷ்டாங்கமாய் விழுந்து அவரை நமஸ்கரித்தான்.

ஈஸ்வர் பிரமித்தான். பரமேஸ்வரன் போலவே குருஜியைப் போன்ற ஒரு மனிதருக்கும் தன் தவறை ஒத்துக் கொள்ள முடிவது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை மனித மனத்தை ஆழமாய் ஆராய முடிந்த அவனுக்கு உணர முடிந்தது. அவர் நினைத்திருந்தால் கணபதியை எதை வேண்டுமானாலும் நம்ப வைத்திருக்கலாம்... ஆனாலும் மனம் மாறி தவறை ஒத்துக் கொண்டு கணபதி களங்கமடையாமல் அவர் பார்த்துக் கொண்டாரே என்று நினைக்கையில் அவன் மனம் பெரும் நிம்மதி அடைந்தது.

கணபதி திரும்ப வந்தவுடன் ஹரிராமிடம் சொன்னான். “அண்ணன் கிட்ட சொல்லுங்க. அவர் சொன்னதுல ஒன்னு சரி. ஒன்னு தப்பு. ஆராய்ச்சில தப்பு ஆக வாய்ப்பு இருக்குன்னு குருஜியே ஒத்துகிட்டாரு. அதனால அண்ணன் என்ன சொல்றாரோ அப்படியே கேட்டு நடந்துக்கோன்னு அவரே சொல்லிட்டாரு. ஆனா குருஜி கெட்டவருன்னு அண்ணன் சொன்னது தப்பு. அவருக்கு குருஜி பத்தி சரியா தெரியலை. அதான் அப்படி சொல்லி இருக்கார்.... ஆனா அண்ணன் அப்படி சொன்னதை நான் குருஜி கிட்ட சொல்லலை. அதனால கவலைப்பட வேண்டாம்னு அண்ணன் கிட்ட சொல்லுங்க

ணபதி போன பிறகு குருஜி அவன் நின்ற இடத்தைத் தொட்டு வணங்கினார். சறுக்கிக் கொண்டிருந்த அவரைத் தடுத்து நிறுத்தியவன் அவன். அக்னி நேத்ர சித்தரின் ஒரு காலத்திய சீடர் மிகவும் கீழிறங்கி விட்ட போதும் பூரணமாய் அழிந்து விடாதபடி உண்மையை உணர்த்தியவன் அவன். அவருடைய மனசாட்சியைத் தட்டி எழுப்பியவன் அவன்.

குருஜியின் மனம் கடந்த கால வாழ்க்கையின் பரிசீலனையில் இறங்கி இருந்ததால் உள்ளே இன்னும் ரணகளமாகவே இருந்தது. நீண்ட சிந்தனைக்குப் பின் அந்த நள்ளிரவு நேரத்தில் தளர்ச்சியுடன் தியான மண்டபத்திற்குச் சென்றார்.  தியான மண்டபத்தில் ஓங்காரம் அமைதியாக ஒலித்துக் கொண்டிருந்தது. விசேஷ மானஸ லிங்கம் தனிமையில் அந்த ஓங்காரத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. விசேஷ மானஸ லிங்கத்தை வணங்கி விட்டு வழக்கமான இடத்தில் குருஜி அமர்ந்து அதனுடன் மானசீகமாகப் பேச ஆரம்பித்தார்.   

“உன்னை வசப்படுத்த வந்து நான் என்னையே இழந்து நிற்கிறேன் விசேஷ மானஸ லிங்கமே! உன்னைப் புரிந்து கொண்டதாய் கர்வம் கொண்டவன் என்னையே புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதை இப்போது தான் உணர்கிறேன். என்னை மன்னித்து விடு மானஸ லிங்கமே

உன் கழுத்தில் நிற்கிற ஆலகால விஷத்தை விடக் கொடிய விஷம் இருக்கிறது உனக்குத் தெரியுமா? அது தான் ‘நான்என்கிற கர்வம். இது எந்த ஞானத்தையும் விஷமாக்கும். எந்த அறிவையும் அனர்த்தமாக்கும். எங்கே எல்லாம் தங்கி இருக்கிறதோ அங்கே எல்லாம் நாசத்தைச் செய்யாமல் அது விடாது மானஸலிங்கமே. அந்தக் கர்வத்தில் தான் நானும் நாசமாய் போனேன். இந்த நான் எந்த நல்லதையும் நல்ல விதத்தில் செய்ய விடாது. செய்கின்ற நல்ல காரியத்தை விட அதிக முக்கியத்துவத்தை, தான் எடுத்துக் கொள்ளும். அப்படி நான் என்ற கர்வம் முந்தி, செய்கின்ற காரியம் பிந்தினால் அதில் முழு நன்மை எப்படி இருக்க முடியும்? நான் புதிய உலகம் படைப்பேன், நான் புதியதோர் விதி செய்வேன் என்றெல்லாம் ஆரம்பித்த போது ஒவ்வொன்றிலும் நான் என்ற விஷத்தை முன்னிறுத்தி இருந்ததை உணர மறந்து விட்டேனே மானஸ லிங்கமே.

தன்னை சரிசெய்து கொள்ளாமல் உலகத்தை சரி செய்யக் கிளம்புவது வேடிக்கையான விஷயமே அல்லவா மானஸ லிங்கமே. ஒவ்வொரு தீவிரவாதியும் அப்படிக் கிளம்பினவன் தானே. மதம், மொழி, நாடு என்று எதை எதையோ காப்பாற்றிக் காட்டுவதாக நினைத்து தன்னுடைய ஆத்மாவைப் பலி கொடுத்தவன் தானே. வேதங்கள் படித்த நான், எல்லா மதங்களின் புனித நூல்களையும் கரைத்துக் குடித்த நான், உன்னை வணங்கிப் பாதுகாத்த அக்னி நேத்ர சித்தரிடம் சிறிது காலம் சீடனாக இருந்த பாக்கியம் படைத்த நான் என் ஆத்ம ஞானத்தைப் பறி கொடுத்ததும் அப்படியே அல்லவா?

நான் எப்போது தடம் மாற ஆரம்பித்தேன் என்று எனக்கே விளங்கவில்லை. விளங்கிக் கொள்ள என் கர்வம் விடவில்லை. சின்னச் சின்ன விலகல்கள் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன மானஸ லிங்கமே. எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருக்கின்றதாய் ஒரு மாயத் தோற்றத்தில் என்னை நம்ப வைத்து உள்ளேயே என்னை செல்லரிக்க வைத்திருக்கின்றன. ஒரு கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் போது அது ஒரே ஒரு டிகிரி விலகிப் பயணம் செய்தாலும் அது அடுத்த கிரகத்துக்குப் போய் சேர்ந்து விடலாம் என்று சொல்கிறார்கள். நான் அப்படியல்லவா போய்ச் சேர்ந்திருக்கிறேன். பசுபதியைக் கொல்ல நான் சம்மதித்த போது ஆரம்பித்த விலகல் என்னை என்னவெல்லாம் செய்ய வைத்து விட்டது பார்த்தாயா? இப்போது தான் யோசித்துப் பார்க்கிறேன், ஆத்ம ஞானம் உபதேசிப்பவனுக்கு குண்டர்கள் துணை எதற்கு? அவனுடைய ஆத்ம பலமே அவனுக்குப் போதாதா? அது போதாதவன், அந்த நம்பிக்கை உறுதியாயில்லாதவன், ஆத்மஞானம் உபதேசிப்பது கேலிக்கூத்தே அல்லவா?...

“வெளியே யாரிடமும் சொல்ல முடியாததை எல்லாம் உன்னிடம் புலம்பி விட்டேன் மானஸ லிங்கமே! என்னை மன்னித்து விடு. நீ கருணை உள்ளவன். அதனாலேயே கணபதியை என்னிடம் அனுப்பி இந்தக் கடைசி நிமிஷத்திலாவது என்னைக் கண் திறக்க வைத்தாய்?  இனி இந்த வாயால் யாருக்கும் உபதேசிக்க மாட்டேன். அடைந்த நல்லதை எல்லாம் இழந்து விட்டேன். ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறேன். இந்த ஜென்மத்தில்.... இந்த ஜென்மத்தில் கடைத்தேறுவது முடியாது என்று எனக்குப் புரிகிறது. அடுத்த ஜென்மத்திலாவது என்னைக் கடைத்தேற்றுவாயா மானஸலிங்கமே?

விசேஷ மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. விளையாட்டாய் ஒளிரும் காரியத்தைக் கூட அது செய்யவில்லை.

ஏதாவது ஒரு பதில் கிடைக்குமா என்று குருஜி பொறுத்திருந்து பார்த்தார். ஒரு பதிலும் கிடைக்காமல் போகவே கனத்த மனத்துடன் அதை மீண்டும் நமஸ்கரித்து விட்டு தளர்ச்சியுடன் அங்கிருந்து சென்றார்.

(தொடரும்)
என்.கணேசன்

  

33 comments:

  1. எதிர் பாராத திருப்பம்.... நன்று.

    ReplyDelete
  2. ஒரு மனிதனை நிர்ணையிப்பது அவனுக்கு என்ன தெரியும் என்பதல்ல, அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனை நிர்ணயிக்கிறது.

    சிறப்பான கருத்து..

    குருஜியின் கண்களை திறந்து வைத்து தன்னைத்தானே
    உணரவைத்த கணபதி பிரமிக்கவைக்கிறான்..!

    ReplyDelete
  3. Unexpected twist. It makes everyone to self analysis our inner mind. Thank you for your guidance through this story.
    N.Valasubramaniam

    ReplyDelete
  4. One of the best chapters in the novel is this. Guruji's speech is excellent. Great sir.

    ReplyDelete
  5. ஆத்ம ஞானம் உபதேசிப்பவனுக்கு குண்டர்கள் துணை எதற்கு? அவனுடைய ஆத்ம பலமே அவனுக்குப் போதாதா? அது போதாதவன், அந்த நம்பிக்கை உறுதியாயில்லாதவன், ஆத்மஞானம் உபதேசிப்பது கேலிக்கூத்தே அல்லவா?

    Great words. Present Corporate swamijis must realize this. I don't think it is a novel Ganeshan. It seems like reality. You write this with great realization. May God bless you.

    ReplyDelete
  6. இதுவரை வெளிவந்த அத்யாயங்களிலே இது மிக சிறந்த ஒன்று ஜி. எத்தனை பாடங்கள் இந்த ஒரு அத்யாயத்தில். நாவலுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் உதாரணங்களுடன் ஒப்பிட்ட தன்மை அருமை அது தங்களின் தனித்தன்மை . எழுதும் பொழுது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்ந்து எழுதியுள்ளீர்கள். மனமார்ந்த நன்றிகள்.
    ஒரு வளரும் இளம் தமிழ் எழுத்தாளர் தனது Facebook Statusல் கூறியிருந்தார்கள் தான் எழுதிக்கொண்டிருந்த தொடர் கதையை தொடர முடியவில்லை என்றும் அதற்கான காரணம் பரமன் ரகசியம் நாவலை படித்ததால் ஏற்பட்ட பிரமிப்பில் இருந்து வெளி வரமுடியவில்லை என்று. இந்த செய்தி எதேட்சையாக என் கண்ணில் பட்டது. இது போல் இந்தநாவலை படிக்கும் அனைவருக்குள்ளும் பெரும் பிரமிப்பை உருவாக்கிவிடுகிறது (பிரமிப்பு என்ற வார்த்தையில் அடங்காத பிரமிப்பு என்பது தான் சரியாக இருக்கும்) . சிலர் வெளிபடுத்துகிறார்கள் சிலர் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் மாற்றம் நிச்சயம்.
    "பரமன் ரகசியம் உருவாக்கும் பல அதிசயம்"
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  7. மிகவும் அருமை...
    கடைசிப் பாரா இனி என்ன ஆகும் என்று ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.

    ReplyDelete
  8. Guruji presents everywhere in present peoples.

    ReplyDelete
  9. Ethipartha visayam endralum padikum pothu romba kastama irunthathu. pala nalla visayangala unga eluthukal pesukirathu.

    ReplyDelete
  10. i dont have any word to describe my feeling.i just cried little bit after reading this episode.

    ReplyDelete
  11. சுந்தர்February 6, 2014 at 8:52 PM

    வில்லன் போல அறிமுகமான போதிருந்தே குருஜியை எனக்கு மிகவும் பிடிக்கும். தில்லுடன் கூடிய கூர்மையான அறிவு காரணம். அன்றிலிருந்து இன்று வரை குருஜி மனதில் நிற்கிறார். ஆரம்பத்தில் அவர் விசேஷ மானஸ லிங்கத்திடம் பேசிய பேச்சு பிரமாதம் என்றால் இப்போதைய பேச்சு எப்படி என்று சொல்ல வார்த்தையே இல்லை. அற்புதம் என்றால் அது கூட கம்மி தான். குருஜி மாதிரி ஒரு கேரக்டரை இப்படி பிரமாதமாய் படைக்க உங்களால் மட்டுமே முடியும் கணேசன் சார்.

    ReplyDelete
  12. What is important.. It is Not the twist & unexpected behaviour of the characters.

    It is the UNIQUE story line, where a genuinely innocent person,( seeking well being of all entities) plays a pivotal role in transforming the thought process of a powerful and dominant Guruji and the novel use telepathic communication, including perception of distant places.

    Hopefully, spirituality wins without any doubt... Regards

    ReplyDelete
  13. What is important.. It is Not the twist & unexpected behaviour of the characters.

    It is the UNIQUE story line, where a genuinely innocent person,( seeking well being of all entities) plays a pivotal role in transforming the thought process of a powerful and dominant Guruji and the novel use telepathic communication, including perception of distant places.

    Hopefully, spirituality wins without any doubt... Regards

    ReplyDelete
  14. குருஜியை கூட தீயவராக காட்ட எண்ணாத உங்கள் மனதை பாராட்டுகிறேன் , வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

    ReplyDelete
  15. குருஜியை கூட தீயவராக காட்ட எண்ணாத உங்கள் மனதை பாராட்டுகிறேன் , வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

    ReplyDelete
  16. Superb novel. Great characterization.

    ReplyDelete
  17. Dr sir we are in ecstasy Wisdom does not make a man bt the genuine ness of the character determines the personality Guruji what a wonderful character Through his speech we refine our thoughts Tku sir

    ReplyDelete
  18. இந்த பகுதியில் இருக்கும் அனைத்து வார்த்தைகளும் அனைவரும் மனதில் என்றும் நிலை நிருத்த வேண்டியவையாக இருக்கின்றன. மிகவும் உணர்ச்சி வசப்படாத அதே சமயம் சத்தியமான வார்த்தைகளை கையாண்டிருக்கிறீர்கள் கணேசன் சார். இதுக்கு உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. மானஸ லிங்கத்தின் முன் குருஜி நமஸ்க்கரித்தது போல நானும் தங்களின் வார்த்தைக் கையாடளுக்கு தலை வணங்குகிறேன்......

    ஜஸ்ட்ட் அசத்திட்டீங்க போங்க....

    ReplyDelete
  19. கீதோபதேசம் போன்ற அருமையான கருத்துக்கள்.மீண்டும் மீண்டும் படிக்க
    தூண்டும் எழுத்துகள்.வாழ்க உங்கள் பணி. என்றும் அன்புடன்-
    டாக்டர்.மு.இரவிச்சந்திரன்.எம்.டி.

    ReplyDelete
  20. Is Guruji the third person

    ReplyDelete
  21. இயல்பிலேயே தன்னிடத்தில் நல் எண்ணங்களைக் கொண்ட மனம், இடையில் பல்வேறு புறச்சூழல்களால் மாசுபட்டு மாறிப் போயிருந்தாலும், தகுந்த நேரத்தில் ஏற்படும் ஒரு சிறு உந்துதல், மீண்டும் அம்மனத்தை அதன் இயல்பான நல்வழியிலேயே செலுத்தும் என்பதற்கு குருஜி ஒரு அருமையான தங்களின் வடிவமைப்பு. மானஸ லிங்கத்தைக் காக்கப் போகும் அந்த 3வது நபராக முழுத் தகுதியுடையவர் குருஜியே. அவராகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    ReplyDelete
  22. Baja Govindham Baja Govindham Govindham Baja slogam than nyabagam vandadu when I read ANS final words to Guruji...what a realization..

    ReplyDelete
  23. Superb episode. we have to analyse ourself like guruji..... Undoubtely guruji is a 3rd person. Manasa lingam than avarathu manathai marivittathu....

    ReplyDelete
  24. So now Guruji has to be killed and the leadership changed.

    ReplyDelete
  25. Getting these thoughts in words is tough and you were able to make sir. Thank you Ganesan sir.

    ReplyDelete
  26. Getting these thoughts in the written form is what the most difficult one and Ganesan sir is able to surpass it. Nice one sir.

    ReplyDelete
  27. அருமை அருமை நன்பரே ...,
    உண்மையில் தற்போதைய ஆன்மீகம் ஆனவ (போதையில்) தான் தறிகெட்டு செல்கிறது ..., “ எக் காலத்திற்க்கும் .., தங்களின் இந்த பதிவு பொருந்தும்..., இப்பதிவு தான் வேதமா உபநிஷத்து யோகம் , ஞானம் எல்லாம் இதற்க்குள் அடங்கும் அடக்க செய்து வீட்டீர்கள் கணேசன் சார்..

    இப் பதிவு போல் எத்துனை உபநிஷ்த்துக்களும் கட்டுரைகளும் தரலாம் .., ரமண கேந்திராலயா சொற்பொழிவு போல் தரலாம். ஆனால் சம்பவம் செயலை அனுபவித்தால் தான் நமக்கு உரைக்கும் .., பர(ம)ன் ரகசியம் மூலம் அனைவருக்கும் உரக்க உரைக்க சொல்லிவீட்டீர்கள் .., நம் அனைத்து வாசகர்களும் கூறுவது போல் எழுத்து வடிவில் கொனர்வது கடினம் .., அதை செய்திருக்கிறீர்கள்...!!

    குருஜியின் எண்ண ஓட்டங்கள்... படிக்கு போது...., கண்களில் நீர்த்தாரை பெருகி ஓடியது .
    .,
    தற்போதைய அனைத்து குருஜிக்களுக்கும் இப் பர(ம) ரகசியம் பொருந்தும்..., உண்மையில் “தற்போது மண்ணுலகில் குரு என்று யாரும் இல்லையப்பா மனிதர்கள் அறிகின்ற வகையிலே .. என்பதே சித்தர்கள் கூற்று...”

    ஆன்மீகத்தில் இந்த “நான்” “என்னால்” என்ற இரு எண்ணம் வந்தால்
    “நானே எனக்கு பகையானென் என் நாடத்தில் நான் திரையானென் “ எனும் பாடல் வரி போல் தான் முடிவுவா(ஆ)கிவிடும்...
    =============================================================================
    1)“ உண்மையில் அப்பாவியான ஆத்மாவிற்க்கும் நல்லவனுக்கும் யாரைப் பார்த்தாலும் நல்லவனாகத்தான் தெரியும் ..,”
    2) ஒரு மனிதனுக்கு ஒரு மனிதன் தெரிந்தோ ., தெரியாமலோ மன அழுத்தத்தை தந்தால் அவன் ஒரு கோடி நாம ஜபத்தை செய்து சேர்த்த புண்ணியத்தை ஒரு கணத்தில் இழ்ந்து விடுகிறான் .., என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
    3) ஒரு நல்ல ஆத்மாவின் மனதை ஒரு கணப் பொழுது ஒருவன் நோகடித்தால் ஆயிரத்திஎட்டு “ஆ” (பசு) இனங்களை கொன்ற பாவம் பீடிக்கும் ., இவையெல்லாம் எத்தனை மனிதர்களுக்கு தெரிகிறது...,
    *மேற்க்கண்ட மூன்றும் அகத்தியெம் பெருமான் ஜீவ அருள் நாடியில் கூறியவை ,

    ReplyDelete
  28. what a turning point great.................so Guruji is the third one isn't he?

    ReplyDelete
  29. அருமையான
    அற்புதமான
    புதினம்
    கதையின் கருத்தை
    பாரட்டுவதா ?
    (அ) ஆசிரியரை
    பாரட்டுவதா ?

    ReplyDelete
  30. பரமன் ரகசியம் ஒரு அற்புதமான படைப்பு

    வேற என்ன சொல்றதுனே தெரியல எல்லா எபிசொட் ஒன்னா படிச்சேன். ஒவ்வரு இடத்தில புல்லரிகிது. ஒவ்வரு காட்சிகள் கண்ணு முண்ணாடி நடகறமாதிரி இருக்குது. இனி ஈஸ்வர் என்ன செய்ய போறேன் பார்க்க ஆர்வமா இருக்குது

    அடுத்த எபிசொட் காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  31. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : !நெஞ்சில் உலா!!!

    ReplyDelete